திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.69 திருக்கோவலூர் வீரட்டம் - திருநேரிசை
செத்தையேன் சிதம்ப நாயேன்
    செடியனேன் அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும்
    புகலிடம் அறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கேன்
    இருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வ தென்னே
    கோவல்வீ ரட்ட னீரே.
1
தலைசுமந் திருகை நாற்றித்
    தரணிக்கே பொறைய தாகி
நிலையிலா நெஞ்சந் தன்னுள்
    நித்தலும் ஐவர் வேண்டும்
விலைகொடுத் தறுக்க மாட்டேன்
    வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
குலைகொள்மாங் கனிகன் சிந்தும்
    கோவல்வீ ரட்ட னீரே.
2
வழித்தலைப் படவு மாட்டேன்
    வைகலுந் தூய்மை செய்து
பழித்திலேன் பாச மற்றுப்
    பரமநான் பரவ மாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை
    என்னினைந் திருக்க மாட்டேன்
கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க்
    கோவல்வீ ரட்ட னீரே.
3
சாற்றுவர் ஐவர் வந்து
    சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர் கனலப் பேசிக்
    கண்செவி மூக்கு வாயுள்
ஆற்றுவர் அலந்து போனேன்
    ஆதியை அறிவொன் றின்றிக்
கூற்றுவர் வாயிற் பட்டேன்
    கோவல்வீ ரட்ட னீரே.
4
தடுத்திலேன் ஐவர் தம்மைத்
    தத்துவத் துயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கிப்
    பன்மலர்ப் பாத முற்ற
அடுத்திலேன் சிந்தை யால
    ஆர்வலித் தன்பு திண்ணங்
கொடுத்திலேன் கொடிய வாநான்
    கோவல்வீ ரட்ட னீரே.
5
மாச்செய்த குரம்பை தன்னை
    மண்ணிடை மயக்க மெய்து
நாச்செய்து நாலு மைந்தும்
    நல்லன வாய்தல் வைத்துக்
காச்செய்த காயந் தன்னுள்
    நித்தலும் ஐவர் வந்து
கோச்செய்து குமைக்க வாற்றேன்
    கோவல்வீ ரட்ட னீரே.
6
படைகள்போல் வினைகள் வந்து
    பற்றியென் பக்கல் நின்றும்
விடகிலா வாத லாலே
    விகிர்தனை விரும்பி யேத்தும்
இடையிலேன் என்செய் கேன்நான்
    இரப்பவர் தங்கட் கென்றுங்
கொடையிலேன் கொள்வ தேநான்
    கோவல்வீ ரட்ட னீரே.
7
பிச்சிலேன் பிறவி தன்னைப்
    பேதையேன் பிணக்க மென்னுந்
துச்சுளே அழுந்தி வீழ்ந்து
    துயரமே இடும்பை தன்னுள்
அச்சனாய் ஆதி மூர்த்திக்
    கன்பனாய் வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்த தென்னே
    கோவல்வீ ரட்ட னீரே.
8
நிணத்திடை யாக்கை பேணி
    நியமஞ்செய் திருக்க மாட்டேன்
மணத்திடை ஆட்டம் பேசி
    மக்களே சுற்ற மென்னுங்
கணத்திடை ஆட்டப் பட்டுக்
    காதலால் உன்னைப் பேணுங்
குணத்திடை வாழ மாட்டேன்
    கோவல்வீ ரட்ட னீரே.
9
விரிகடல் இலங்கைக் கோனை
    வியன்கயி லாயத் தின்கீழ்
இருபது தோளும் பத்துச்
    சிரங்களும் நெறிய வூன்றிப்
பரவிய பாடல் கேட்டுப்
    படைகொடுத் தருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த
    கோவல்வீ ரட்ட னீரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com